Published : 14 Jul 2018 07:55 AM
Last Updated : 14 Jul 2018 07:55 AM

எங்கள் கட்சியை உடைத்தால் காஷ்மீரில் விளைவு மோசமாக இருக்கும்: பாஜக.வுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை

எங்கள் கட்சியை உடைத்தால் மோசமான விளைவு ஏற்படும், யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகளை மேலும் உருவாக்க வேண்டாம் என பாஜகவுக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி)  தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.

காஷ்மீரில் 2014 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறிதுகால அரசியல் குழப்பத்துக்கு பிறகு எதிரெதிர் கொள்கைகளை கொண்ட பிடிபி-யும் பாஜகவும் அங்கு இணைந்து ஆட்சி அமைத்தன. பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் கடந்த ஜுன் 19-ம் தேதி பிடிபி-யுடன் தனது கூட்டணி உறவை பாஜக முறித்துக்கொண்டது. இதையடுத்து மெகபூபா பதவி விலகினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததும், இதனால் ஜம்மு மற்றும் லடாக்கில் பாஜகவுக்கு எதிராக அதிருப்தி உருவானதுமே பிடிபி-யுடன் பாஜக தனது கூட்டணியை முறித்துக்கொண்டதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

காஷ்மீரில் தற்போது மெகபூபாவுக்கு எதிராக அவரது கட்சி எம்எல்ஏக்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தோ அல்லது பாஜவுடன் சேர்ந்தோ மாற்று அணி அமைக்கவும் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரவும் முயன்று வருகின்றனர்.

பாஜக புதிய நிபந்தனைகள் ஏதும் விதிக்கக்கூடாது, காஷ்மீர் முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணிக்கு அவர்கள் தயார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிடிபி தலைவர் மெகபூபா நேற்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “1987-ல் நடந்தது போன்று ஜம்மு காஷ்மீர் மக்களின் வாக்குரிமையை டெல்லி அரசு நிராகரிக்க முயன்றால்,  பிளவுகளையோ, தலையீடுகளையோ ஏற்படுத்த முயன்றால், சலாஹுதீன், யாசின்மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் மேலும் உருவாகிடுவர். பிடிபி-ஐ பாஜக உடைக்க முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்றார்.

இதனிடையே  காஷ்மீரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக கூறப்படுவதை அக்கட்சி மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x