Published : 12 Jul 2018 08:14 PM
Last Updated : 12 Jul 2018 08:14 PM

இரும்புத் தொழிற்சாலையில் காஸ் கசிவு: 6 தொழிலாளர்கள் பரிதாப பலி

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் இன்று மாலை தனியார் இரும்புத் தொழிற்சாலையில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி பகுதியில் தனியார் இரும்புத் தொழிற்சாலை உள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்தத் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ‘ஷிப்ட்’ முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் திடீரென இங்கு காஸ் கசிவு ஏற்பட்டது. இதனை அறிந்து தொழிலாளர்கள் பலர் தப்பிக்க தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர்.

ஆனால், இதில், 8 தொழிலாளர்கள் மட்டும் தொழிற்சாலைக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் மூச்சு திணறி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் உயிருக்குப் போராடினர். உடனடியாக இவர்களை தாடிபத்ரி அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தாடிபத்ரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x