Published : 11 Jul 2018 06:53 AM
Last Updated : 11 Jul 2018 06:53 AM
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை 2 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக்பால் சட்டப்படி மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயம். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த அமைப்பை உருவாக்காமல் காலம் தாழ்த்தியதையடுத்து அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது.
லோக் ஆயுக்தா அமைப்பில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள். எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ, அமைச்சர், முன்னாள் அமைச்சர், அரசு ஊழியர் ஆகியோர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்ததாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிவில் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரம் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள விவரத்தை தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா தாக்கல் செய்தார். இந்த அமைப்பை முழுமையாக உருவாக்க 2 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் அவர் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் 2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
புதுச்சேரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லோக் ஆயுக்தா சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரியில் வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்றக் கூறிய நீதிபதிகள், 3 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தாவை உருவாக்க உத்தரவு பிறப்பித்தனர். இதேபோன்று ஒடிஸா உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் 2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை முழுமையாக உருவாக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT