Published : 08 Jul 2018 12:15 PM
Last Updated : 08 Jul 2018 12:15 PM

நிர்பயா பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு உறுதியாகுமா?- உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

புதுடெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் கடத்திச் சென்று ஓடும் பஸ்ஸில் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 29-ம் தேதி மரணமடைந்தார். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை இந்தவழக்கு ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பஸ்ஸின் ஓட்டுநர் ராம் சிங், ஒரு மைனர் சிறுவன், முகேஷ்(29), பவன்குமார் குப்தா(22), வினய் சர்மா(23) அக்சய் குமார் சிங்(23) ஆகியோர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடக்கும் போதே, பஸ்ஸின் ஓட்டுநர் ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற 5 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் முகேஷ், பவன்குமார் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து, இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

சிறார் நீதிமன்றத்தில் அந்த சிறுவனுக்கு எதிராக நடந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனைக் காலம் முடிந்து அவரும் விடுதலையாகிவிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி, முகேஷ், பவன்குமார் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சார்பில் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்கக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஆர் பாணுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த மே மாதம் 18-ம் தேதி தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ஜூலை 9-ம் தேதி நண்பகல் 2மணிக்கு மேல் தீர்ப்பு அளிக்கும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x