Published : 02 Jul 2018 12:09 PM
Last Updated : 02 Jul 2018 12:09 PM

அமிதாப் பச்சன் வீட்டை காட்டுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் -சுற்றுலா வந்த இத்தாலி பெண்ணுக்கு காரில் நேர்ந்த கொடுமை

நடிகர் அமிதாப்பச்சன் வீட்டை காட்டுவதாக கூறி இத்தாலியில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணை காரில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ‘டூரிஸ்ட் கைடு’ எனக் கூறி ஏமாற்றிய நபரை மும்பை போலீஸார் தேடி வருகின்றனர்.

இத்தாலியில் வங்கி அதிகாரியாக பணியாற்றி வரும் 37 வயது பெண் ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். சில மாதங்களாக இங்கு தங்கியிருந்து பல முக்கிய நகரங்களை சுற்றிப் பார்த்த அவர் சில நாட்களுக்கு முன்பு மும்பை வந்துள்ளார். மும்பையில் சில இடங்களை சுற்றி பார்த்த நிலையில் கடந்த மாதம் 14-ம் தேதி இளைஞர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியாக இருப்பதாக கூறிய அந்த இளைஞர் இத்தாலி பெண்ணை பல இடங்களுக்கு சென்று காண்பித்துள்ளார். பேருந்திலேயே பல இடங்களக்கு சென்ற அவர்கள் இறுதியாக ஜூகு பீச் சென்றுள்ளனர்.  அப்போது இந்தி திரைப்படங்கள் பற்றியும், நடிகர் அமிதாப் பச்சன் பற்றியும் இத்தாலி பெண்ணுக்கு அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இரவு 7 மணி ஆன நிலையில், கொலாபா பகுதியில் தான் தங்கியுள்ள ஹோட்டலுக்கு செல்ல விரும்புவதாக இத்தாலி பெண் கூறியுள்ளார். ஆனால் அவரை அமிதாப் பச்சன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக இளைஞர் கூறியுள்ளார். அமிதாப் பச்சன் வீட்டை பார்த்து விட்டு அங்கிருந்து ஹோட்டலில் சென்று இறக்கி விடுவுதாக இளைஞர் கூறியுள்ளார்.

அந்த இளைஞரின் ஏற்பாட்டின் பேரில் கார் ஒன்றை வரவழைத்து அதில் இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில் மதுக்கடை அருகே காரை நிறுத்திய இளைஞர் மது வாங்கியுள்ளார். பின்னர் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லுமாறு கார் ஓட்டுநரை இளைஞர் கேட்டுக் கொண்டார். மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு கார் சென்ற நிலையில் இத்தாலி பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி அவரை அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காரிலேயே கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இத்தாலி பெண்ணை இறக்கி விட்டு ஓட்டுநர் காரை ஓட்டிக் கொண்டு சென்று விட்டார். இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த அந்த பெண் ஹோட்டலுக்கு சென்றார். பின்னர் மறுநாள் இத்தாலி தூதரகத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமையை சொல்லி அழுதுள்ளார்.

இதையடுத்து இத்தாலி தூதரகத்தின் உதவியுடன் மும்பை போலீஸாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். இத்தாலி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மும்பை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x