Published : 24 Jun 2018 09:56 AM
Last Updated : 24 Jun 2018 09:56 AM
ஜம்மு, லடாக் பகுதிகளை புறக்கணித்ததால் மெகபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றோம் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. கடந்த 19-ம் தேதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் முதல்வர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார். அங்கு தற்போது ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று ஜம்முவுக்கு சென்றார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியது. ஆனால் மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசு வளர்ச்சித் திட்டங்களில் ஜம்மு, லடாக் பகுதிகளைப் புறக்கணித்தது. ஜம்மு, லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் சரிசமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று பாஜக விரும்பியது. அதற்கு நேர்மாறாக அரசு செயல்பட்டதால் ஆதரவை வாபஸ் பெற்றோம். ஆட்சி, அதிகாரம் பெரிதல்ல. மாநிலத்தின் நலனே முக்கியம். காஷ்மீர் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT