Published : 20 Jun 2018 07:30 PM
Last Updated : 20 Jun 2018 07:30 PM

மோடியை கிண்டல் செய்து பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ்காரர்: இன்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாகப் பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ் தொண்டருக்கு லாபம் கிடைத்து அவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று வதோதராவில் 35 கடைகளுக்குத் தனது பகோடாக்களை விற்பனை செய்ய உரிமம் அளித்து இருக்கிறார்.

குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த இந்த இளைஞர் நாள்தோறும் 600 கிலோ பகோடாக்களை விற்பனை செய்து, ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இளைஞர்கள் வேலையில்லாவிட்டால் வருத்தப்படத் தேவையில்லை, மாறாக, பக்கோடா கடைவைத்தால், நாள்ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.200 வரை சம்பாதிக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடியின் கருத்து நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நகரங்களில் பக்கோடாக்களை விற்பனை செய்து மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம், வதோதாரைவைச் சேர்ந்தவர் நாராயண்பாய் ராஜ்புத். காங்கிரஸ் கட்சியின் என்எஸ்யுஐ உறுப்பினராக இருக்கிறார். பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு அவரைக் கிண்டல் செய்யும் விதமாகப் பக்கோடா கடை வைத்தார், ஆனால், அவரே எதிர்பார்க்காமல் அனைத்துச் செலவுகளும் போக, அவருக்கு நாள்தோறும் ரூ.200 முதல் ரூ.400 வரை லாபம் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து, சொந்தமாகப் பக்கோடா கடையை நடத்தத் தொடங்கி, நகரில் 35 கடைகளுக்கு இவரின் பக்கோடாக்களை விற்பனை செய்ய உரிமம் அளித்திருக்கிறார். நாள்தோறும் 500 முதல் 600 கிலோ பக்கோடாக்களை விற்பனை செய்கிறார்.

இது குறித்து நாராயண் ராஜ்புத் கூறியதாவது:

நான் முதுகலை இந்தி இலக்கியம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தேன். காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர். பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு முதலில் கிண்டல் செய்யும் விதமாக, பக்கோடா கடை வைத்தேன். ஆனால், இப்போது பக்கோடா கடையின் உரிமையாளர் என்பதில் பெருமையாக இருக்கிறது. என்னுடைய கடையில் சமைக்கப்படும் பக்கோடாக்கள் 35 கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

முதல் நாளில் நான் பக்கோடா போட்டு விற்பனை செய்தபோது எனக்கு ரூ.200 லாபமாகக் கிடைத்தது. அப்போது வேலையில்லாமல் சும்மா இருப்பதைக் காட்டிலும் இப்படி விற்பனை செய்யலாம் என நினைத்து தினமும் பக்கோடா விற்பனை செய்தேன் நல்ல லாபம் கிடைத்தது. முதலில் 10 கிலோ மூலப்பொருட்கள் மூலம் பக்கோடா செய்த நான் இன்று 500 முதல் 600 கிலோ வரையிலான மூலப் பொருட்களில் நாள்தோறும் பக்கோடாக்கள் போட்டு விற்பனைக்கு அனுப்புகிறேன்.

நான் பக்கோடா விற்பனை செய்கிறேன் என்பதற்காக பாஜகவில் சேரமாட்டேன். நான் சாகும்வரை காங்கிரஸ் தொண்டராகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய அடுத்த ஜென்மத்திலும் காங்கிரஸ் தொண்டராகவே இருக்க விரும்புகிறேன்.

என்னுடைய கடைக்கு ராமர் என்று பெயர்வைத்துள்ளேன். ராமாயணத்தில் வருவதுபோல், தண்ணீரில் கற்கள் மிதக்க முடியும் என்றால், ராமர் பெயரைக் கூறி அமித் ஷாவும், மோடியும் நாட்டை ஆள முடியும் எனும்போது, என்னுடைய கடையும் ராமர் பெயரைச் சூட்டி நன்றாக விற்க முடியும்.

நான் 100 கிராம் பக்கோடாவை ரூ.10க்கு விற்பனை செய்கிறேன். காலையில் 7 மணி முதல் 11 மணிக்குள் 300 கிலோ உளுந்துவடை விற்பனையாகிறது, இதேபோல மாலையும் விற்பனையாகிறது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x