Last Updated : 20 Jun, 2018 08:04 AM

 

Published : 20 Jun 2018 08:04 AM
Last Updated : 20 Jun 2018 08:04 AM

கர்நாடக மாநிலத்தில் சிறப்பு பட்ஜெட்டுக்கு ராகுலிடம் அனுமதி பெற்ற குமாரசாமி: முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிருப்தி

கர்நாடக முதல்வர் குமாரசாமி, சிறப்பு பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அனுமதி பெற்றுள்ளார். இதனால் முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் முடிவடையும் நிலையில், அரசு செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி சிறப்பு ப‌ட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்தார். இதற்கு முன்னாள் முதல்வரும், கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டே போதுமானது. தேவைப்பட்டால் புதிய திட்டங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் பாக்யா திட்டங்களை நிறுத்தக் கூடாது என சித்தராமையா தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த குமாரசாமி, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அதற்கு பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தேசிய‌ தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கோரினார். சித்தராமையா போன்றோர் அரசின் முடிவுகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதற்கு ராகுல் காந்தியும் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில் குமாரசாமி நேற்று பெங்களூருவில் கூறியதாவது:

கர்நாடகாவில் புதிய அரசு அமைந்தால் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். இதற்கு ராகுல் காந்தி, துணை முதல்வர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் அனுமதி அளித்துள்ளனர். மக்களின் நலனுக்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் யாரும் அதிருப்தி அடைய வேண்டியதில்லை. ஜூலை முதல் வார‌த்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். விவசாயிகளின் க‌டனை தள்ளுபடி செய்யவும் ராகுல் அனுமதி அளித்திருக்கிறார். விரைவில் அமைச்சரவையை கூட்டி கடனை தள்ளுபடி செய்வது குறித்து விவாதிக்கப்படும். பின்னர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x