Published : 19 Jun 2018 04:06 PM
Last Updated : 19 Jun 2018 04:06 PM

பதவி விலகினார் முதல்வர் மெஹபூபா: ‘பாஜகவுடன் ஒவ்வொரு நாளும் பிரச்சினை தான்’ - பிடிபி குற்றச்சாட்டு

ஜம்மு - காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், அடுத்த திருப்பமாக, முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என். வோராவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளித்தார்.

காஷ்மீரில் முதல்வர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணியில் கடும் மோதல் எழுந்த நிலையில், கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவதாக பாஜக இன்று அறிவித்தது.

இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் ராம் மாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘காஷ்மீரில் நாளுக்கு நாள் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்டுள்ளார். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால்தான் மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். இதே நிலை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்’’ எனக் கூறினார்.

இதையடுத்து அடுத்த திருப்பமாக முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என். வோராவை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அவர் அளித்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் பீர் மன்சூர் கூறுகையில் ‘‘பாஜகவின் முடிவு எதிர்பார்த்தது தான். எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே ஒவ்வாரு நாளும் எங்களுக்கு கடினமாக தான் கடந்து சென்றது. முடிவுகள் எடுக்க முடியாமல் திணறினோம். அவர்கள் எங்களுக்கு பொருத்தமானவர்கள் அல்ல. இனி மக்கள் ஜனநாயக கட்சி தனது பாதையில் பயணம் செய்யும்’’ எனக் கூறினார்.

இதனிடையே அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதேசமயம் மாற்று அரசு அமைப்பது தொடர்பான சூழல் உருவாகியுள்ளதால் இதுபற்றி காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x