Published : 19 Jun 2018 03:18 PM
Last Updated : 19 Jun 2018 03:18 PM

2014-ல் நடந்த அரசியல் விபத்து 2019-ம் ஆண்டில் நடக்காது: பாஜகவை விளாசிய சிவசேனா

2014-ம் ஆண்டில் நடந்த அரசியல் விபத்துபோல், 2019-ம் ஆண்டில் நடக்காது என்று சிவசேனா கட்சி மறைமுகமாக பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது.

மஹாராஷ்டிராவில் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்போம், மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது. தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் சிவசேனா கட்சி எழுதியுள்ளதாவது:

''நாட்டின் அரசியல் சூழல் மாறி வருகிறது. 2014-ம் ஆண்டு நடந்த அரசியல் விபத்து 2019-ம் ஆண்டும் நடக்காது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அகம்பாவத்தோடு இருந்ததும் இல்லை, எதிர்காலத்திலும் அதுபோன்று இருக்கப்போவதும் இல்லை.

நாடு அவசரகால நிலைக்குக் கொண்டுவருதற்கான சூழலை உணர்த்துவது போன்று இருக்கிறதா என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகிறார்கள். காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு டெல்லியில் வாய், மூச்சு ஆகியவற்றை முடக்கிக் கொல்லப்படுகிறது.

டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் சிலர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, பிடிவாத மனப்போக்குடன் செயல்பட்டால், தேர்தல் நடத்துவதும் கடினமாகும், அரசை நடத்துவதும் கடினமாகும்.

டெல்லியில் மட்டும் தூசிப்புயல் வீசவில்லை. நாடு முழுவதும் வீசுகிறது. ஆனால், பிரதமர் மோடி எதுவுமே தெரியாதது போல், வழக்கம் போல் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்கிறார். பிரதமர் மோடி எந்தவிதமான சுவாசம் தொடர்பான பிரச்சினைகளையும் சந்திப்பதில்லை. ஆனால், மக்கள் ஏராளமான சிக்கல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள்.

சிவசேனாவின் பாதைகள் ஒருபோதும் எளிமையாக இருந்தது இல்லை, இன்றுகூட எளிமையாக இருக்கவில்லை. அடுத்து வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அப்போது, டெல்லியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். நமக்கு மிக அதிகமான நம்பிக்கை இருக்கிறது.

அசாம் கன பரிசத் தலைவர்கள் சமீபத்தில் உத்தவ் தாக்ரேவைச் சந்தித்தனர். அப்போது மாநிலக் கட்சிகள் அனைத்தும் சிவசேனா தலைமையில் ஒன்று திரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நாங்கள் கூறுவதெல்லாம், அசாம் மக்களின் கலாச்சாரம், மொழி போன்றவற்றுக்கு வெளி மாநிலத்தவரால் அச்சுறுத்தல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.''

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x