Published : 19 Jun 2018 12:06 PM
Last Updated : 19 Jun 2018 12:06 PM
அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.
தின்சுக்கி நகரின் லாய்புளி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரம் கடந்த மே மாதம் 20-ம் தேதியில் இருந்து ஏதோ பழுது காரணமாகச் செயல்பாட்டில் இல்லை. இதில் பணம் இருந்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயற்சித்தும் பணம் வராத காரணத்தால், தொடர்புடைய வங்கியில் புகார் செய்தனர்.
இதையடுத்து, கடந்த 11-ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தைப் பராமரிக்கும் கவுகாத்தியைச் சேர்ந்த எப்ஐஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பழுதுபார்க்கச் சென்றனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தைத் திறந்து பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த மொத்த பணத்தையும் எலி துண்டு, துண்டாக கடித்துக் குதறியிருந்தது. அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணம் அனைத்தையும் எலி கடித்துக் குதறியுள்ளது.
இது குறித்து ஏடிஎம் இயந்திரத்தைப் பராமரிக்கும் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், ''கடந்த மாதம் 19-ம் தேதியில் இருந்து ஏடிஎம் இயந்திரம் இயங்கவில்லை. ரூ.17 லட்சம் பணம் தொடக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், பழுதாகி இயந்திரம் நிற்கும் போது, ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் இருப்பு இருந்துள்ளது.
அனைத்து பணமும் ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளாகும். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி இயந்திரத்தைப் பழுதுபார்க்க நாங்கள் சென்று இயந்திரத்தைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளும் துண்டு, துண்டுகளாக இருந்தன. மனிதர்கள் வெட்டப்பட்டதுபோல் அல்லாமல், எலிகள் கடித்துக் குதறியது போன்று இருக்கிறது.
இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளோம். அவர்கள் வந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை ஆய்வு செய்து, வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்'' எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT