Published : 19 Jun 2018 09:27 AM
Last Updated : 19 Jun 2018 09:27 AM

சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு; நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன்

சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேட்டில் நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. அதேசமயத்தில், தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஒரு பெண்ணை விசாரணைக்காக அவரது இருப்பிடத்தை விட்டு வேறு இடத்துக்கு வர வற்புறுத்துவது என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 160-வது பிரிவின் கீழ் தடை செய்யட்டிருக்கிறது. எனவே, அமலாக்கத்துறை சார்பில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என நளினி கோரியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, நளினி சிதம்பரம் தற்போது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக நாளை ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x