Published : 14 Jun 2018 08:06 AM
Last Updated : 14 Jun 2018 08:06 AM

எய்ம்ஸ் நிறுவனங்களில் பயிலும் முதுநிலை மாணவருக்கு நேரடிப் பணி நியமனம்: மத்திய அரசு முடிவு

எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிலையங்களில் பயிலும் முதுநிலை மாணவர்களை, நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நேரடியாக பணி நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எய்ம்ஸ் கல்வி நிலையங்களில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களை, நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நேரடியாக பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த மாணவர்கள், எய்ம்ஸ் தேர்வுக் குழு மூலமாகவே நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். அந்த நியமனங்களுக்கு எய்ம்ஸ் நிர்வாகக் குழுவும், நிறுவனக் குழுவும் ஒப்புதல் வழங்கும்.

தற்போது வரை, மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கும், பணி நியமனம் செய்யப்படுவதற்கும் தனித்தனி நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. புதிய நடவடிக்கையின் மூலம், மருத்துவர் பணி நியமனங்களில் நிலவி வந்த தாமதம் ஒழிக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை பிரச்சினையும் சீராகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர் உள்ளிட்ட 7 நகரங்களில் எய்ம்ஸ் கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. தவிர, 13 நகரங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x