Published : 13 Jun 2018 08:17 PM
Last Updated : 13 Jun 2018 08:17 PM
டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காலவரையரையற்ற உண்ணா விரதம் அறிவித்துள்ளார். செவ்வாயன்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
வீட்டுக்கே ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் திட்டத்துக்கு அனுமதி கோரி ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆட்சியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும், அதன் தொண்டர்களும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து ராஜ் நிவாஸுக்கு பேரணி மேற்கொண்டனர்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வீடியோ மூலம் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், “எங்களுக்காக நாங்கள் போராடவில்லை, மக்களுக்காகவே போராடுகிறோம். பள்ளிகளுக்காக, தண்ணீருக்காக, மொஹல்லா கிளினிக்குகளுக்காக, நாங்கள் போராடுகிறோம், ஏன், வாக்களித்த டெல்லி மக்களுக்கி இந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம்” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசை எதிர்த்து தலைநகரில் இருக்கும் ஒரு முதல்வரின் ஆட்சியே ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மக்களின் நலன்களுக்காக ஆனால் இதில் காங்கிரஸ், பாஜக இருவரும் கைகோர்த்துக் கொண்டு இப்போராட்டத்தை ‘ஜனநாயகத்தைக் கேலி செய்யும்’ போராட்டம் என்று வர்ணிக்கின்றனர்.
ஹரியாணா மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்த தண்ணீரைக் குறைக்கவைத்து விட்டு தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்த்து பாஜகவே முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக போராடப்போகிறதாம், இது ஜனநாயகக் கேலிக்கூத்து இல்லையா? என்று பலரும் கொதிப்படைந்துள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவிலிருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா, “வாஜ்பாயி இன்று பிரதமராக இருந்திருந்தால் மத்திய உள்துறை அமைச்சரையே டெல்லி முதல்வருடன் அமர்ந்து தீர்வு காணுமாறு உத்தரவிட்டிருப்பார்” என்று சாடிஉள்ளார். இவரும் ஆம் ஆத்மியின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஆனாலும் அரவிந்த் கேஜ்ரிவாலின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகிவருவதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT