Last Updated : 13 Jun, 2018 08:51 AM

 

Published : 13 Jun 2018 08:51 AM
Last Updated : 13 Jun 2018 08:51 AM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை; கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விரைவில் தமிழகத்துக்கு நீர் திறக்க வாய்ப்பு

கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய‌ தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பரவலாக பெய்துவருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா,ராம்நகர் ஆகிய மாவட்டங்க‌ளிலும் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்ட‌ மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று குடகு மாவட்டத்தில் 104.56 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. அடுத்த இரு தினங்களுக்கும் குடகில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

வேகமாக நிரம்பும் அணைகள்

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 82.80 அடியாக (மொத்தக் கொள்ளளவு 124.80 அடி) உயர்ந்திருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 17,883 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 342 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,270 அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 17,921 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே போல கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,815 அடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு வினாடிக்கு 7,250 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், 30 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.குடகு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2922 அடி உயரத்தில் அமைந்துள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,880 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 29,370 நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் கபினி அணையின் நீர்மட்டம் 12 அடி அதிகரித்திருக்கிறது. இதே நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு நீடித்தால் கபினி அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் காவிரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் கர்நாடக, தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x