Published : 12 Jun 2018 08:16 AM
Last Updated : 12 Jun 2018 08:16 AM
ஆந்திர முதல்வர் சந்திரபாபாபு நாயுடு எதிர்க்கட்சிகளின் மாநாட்டை டெல்லியில் கூட்டவுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான கூட்டணி குறித்த ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.
வரும் 2019 மக்களவை தேர்தலில் பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலை உருவாகி வருகிறது. இதனால், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தம் பலத்தை காட்டுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சூழலை வட இந்திய அரசியல் தலைவர்கள் முன்னெடுத்து வந்தனர். இந்தமுறை தென்னிந்திய தலைவர்கள் செய்து வருகின்றனர். கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். மே 23-ல் தன் பதவி ஏற்பு விழாவிற்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி.குமாரசாமி, அனைவரையும் அழைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான நாயுடு இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் தெலுங்குதேசம் கட்சியின் எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, “எங்கள் கட்சி நடத்தவிருக்கும் மாநாட்டில் மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதன் சக்தியை எதிர்க்கட்சிகள் ஜூலை 15 முதல் நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் காட்டுவார்கள். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசி வருகிறோம்” எனத் தெரிவித்தன.
டெல்லியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்கு முன்பானதா அல்லது பிறகானதா? என்பது உறுதியாகத் தெரிந்துவிடும். மாநிலங்களில் எந்த கட்சிக்கு யாருடன் கூட்டு என்பதையும் பேசி முடிவு எடுக்க இந்தக் கூட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது.
மக்களவை தேர்தல்களுக்கு முன்பாக இதுபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவது முதன்முறையல்ல. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக அக்டோபர் 2013-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்றாவது கூட்டணிக்கான மாநாடு டெல்லியில் நடத்தப்பட்டது. இதில் அதிமுக உள்ளிட்ட 13 மாநில கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டணி படுதோல்வி அடைய பாஜகவிற்கு தனிமெஜாரிட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT