Published : 11 Jun 2018 09:06 PM
Last Updated : 11 Jun 2018 09:06 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறைகளில் வாடும் கைதிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், இதுவரை 459 கைதிகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.
உ.பி. மாநில சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்துறையுடன் உ.பி. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம் இணைந்து கைதிகளுக்கு ரத்தப் பரிசோதனை முகாமை கடந்த மாதம் தொடங்கியது. இதுவரையும் 78,739 கைதிகளுக்கு பரிசோதனை முடிந்துள்ளது. இதில், 459 பேர் முதன்முறையாக எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் உ.பி. தலைநகரான லக்னோ சிறையில் மிக அதிகமாக 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடுத்த எண்ணிக்கையில் காஜியாபாத்தில் 43, முராதாபாத்தில் 33 பேருக்கும் எய்ட்ஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. அலிகரில் 24 மற்றும் நைனி சிறையில் 21 பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் உ.பி. அரசு சார்பில் இலவச சிகிச்சை தொடங்கப்பட்டு விட்டது. இவர்களில் மீதம் உள்ள 11,166 கைதிகள் ரத்தப் பரிசோதனை செய்ய மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தையும், பலனையும் எடுத்துரைத்து வருகிறார்கள். ஏனெனில், இந்த சோதனைக்காக கைதிகளை அரசு கட்டாயப்படுத்த சட்டத்தில் இடம் இல்லை.
ஆண், பெண் உறவை விட ஓரினச்சேர்க்கையில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக உ.பி. சிறையில் இந்த அளவிலான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதேபோல், கடந்த வருடம் உ.பி. சிறையில் மொத்தம் உள்ள 89,885 கைதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 169 பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை இந்த வருடம் அதிகமாகி இருப்பது கவலைக்குரிய விஷயமாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT