Published : 24 May 2018 05:57 PM
Last Updated : 24 May 2018 05:57 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘வேறிடத்தில்’ இருந்து உத்தரவு வந்ததா? - காங்கிரஸ் சந்தேகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை வன்மையாக கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து உத்தரவு பெற்று காவல்துறை தாக்கியதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘‘ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை, ஸ்டெர்லைட் பலியுடன் ஒப்பிடுவது அதீதமானது அல்ல. ஜாலியன் வாலாபாக் கொடுமை ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என ஸ்டாலின் கேட்பது 100 சதவீதம் நியாயமே. மேலே இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு தமிழக அரசு சந்தோஷமடைந்து கொள்கிறது. வேறு எங்கிருந்தோ உத்தரவு பெற்று காவல்துறை செயல்பட்டிருக்காது என நம்புவோம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x