Last Updated : 23 May, 2018 12:46 PM

 

Published : 23 May 2018 12:46 PM
Last Updated : 23 May 2018 12:46 PM

தேர்தலுக்கு முன் கோயிலா நோ, நோ; வெற்றிக்குப் பின் யாகம், வழிபாடு என பிஸியாக ஓடும் தேவகவுடா குடும்பம்

 கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவும், அவரின் மகன் குமாரசாமியும் கோயில் பக்கமே செல்லாதநிலையில், வெற்றிக்குப்பின் கோயில், யாகம் என பரபரப்பாக மாறிவிட்டனர்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சி என்ற நிலையில் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. மாநிலத்தில் 24-வது முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் தேர்தலுக்கு முன் தேவகவுடாவும், அவரின் மகனுமான குமாரசாமியும் கோயில் பக்கமே செல்லாத நிலையில், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து கோயில், யாகம் என ஓடிக்கொண்டு இருக்கின்றனர்

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், குமாரசாமி முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, கடந்த ஜனவரி மாதம் தேவகவுடா சிருங்கேரியில் உள்ள சாரதா பீடத்தில் அதி ருத்ரா என்ற பிரமாண்டமான யாகத்தை 11 நாட்கள் நடத்தினார். அதன்பின் கோயில்களுக்கு செல்லாமல் இருவரும் இருந்து வந்தனர். இந்த நிலையில், இப்போது மீண்டும் கோயிலுக்குச் செல்லத் தொடங்கி இருக்கின்றனர்.

சிருங்கேரியில் உள்ள மடத்தின் பீடாதிபதி ஆசியைப் பெறுவதற்காக தேவகவுடாவும், அவரின் மகன் குமாரசாமி குடும்பத்தினர் நேற்று சென்றனர். அங்கு ஆசி பெற்ற தேவகவுடா குடும்பத்தினர், நவ சண்டிகா யாகத்தை நடத்தியுள்ளனர். பின் அங்கிருந்து புறப்பட்டு தர்மஸ்தலாவுக்கு சென்று மஞ்சுநாதா கோயிலில் தேவகவுடா குடும்பத்தினர் வழிபாடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, தேர்தல் முடிந்தபின், சாமுஸ்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வந்த குமாரசாமி, எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறங்கியபின் படு உற்சாகமாக மாறிவிட்டார். விஜயநகரில் உள்ள ஆதிசுஞ்சுநகரி மடத்துக்குச் கடந்த சனிக்கிழமை சென்ற குமாரசாமி, அதன் தலைவர் நிர்மலாநந்தநாதசாமியிடம் ஆசி பெற்றார்.

அன்றைய தினமே, தேவகவுடா தனது வீட்டில் ஒரு விஷேசமான யாகம் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு, அன்றைய தினமே திருப்பதி கோயிலுக்கு வழிபாடு செய்ய குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி சென்ற குமாரசாமி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்காதர் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று அங்கு வழிபாடு நடத்தினார்.

திங்கள்கிழமை காலையில் தேவகவுடா தனது சொந்த ஊரான ஹோலேநரசிபூருக்கு சென்றார். அங்கு உள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், சிவன் கோயிலுக்கு சென்று தேகவுடா குடும்பத்தினர் வழிபாடு நடத்தினார்.

தேர்தல் வெற்றிக்குப்பின் கோயில் கோயிலாக சுற்றுவது குமாரசாமியிடம் கேட்டபோது, ‘‘கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது எனக்கும், எனது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மாநிலத்தின் மக்களுக்காகவும், நல்ல வளர்ச்சிக்காகவும் சேர்த்துத்தான். மக்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும், மழை நன்றாகப் பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். தனிப்பட்ட ஆசைக்காகக் கோயிலுக்கு செல்லவில்லை. புதன்கிழமை பதவி ஏற்கும் முன் மீண்டும் சாமுண்டீஸ்வர் கோயிலுக்குச் செல்கிறேன்’’ எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x