Published : 22 May 2018 03:28 PM
Last Updated : 22 May 2018 03:28 PM

எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமரிசித்து முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், நிறுவனங்களில் பணி புரிவது குறித்தும் மிகவும் தரக்குறைவான கருத்தை பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தாம் கைதாகாமல் இருக்க எஸ்.வி.சேகர் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாகன எஸ்.வி.சேகர் தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில் முன் ஜாமீன் கோரி, எஸ்.வி.சேகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

எஸ்.வி. சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘முகநூல் பதிவு தொடர்பாக எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் எஸ்.வி.சேகரை, ஜூன் 1-ம் தேதி வரை தமிழக காவல்துறையினர் கைது செய்ய தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x