Published : 21 May 2018 08:26 AM
Last Updated : 21 May 2018 08:26 AM
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜு கிஷோர் சல்லா. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி மும்பை-டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணித்தார். அப்போது விமான கழிப்பறையில், விமானம் கடத்தப்பட்டதாக ஒரு செய்தியை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. விசாரணையில் வதந்தியை பரப்பியது பிர்ஜு என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிர்ஜுவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகத்துக்கு (டிஜிசிஏ) புகாரையும் அளித்தது. சம்பவம் நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு, அனைத்து விமானங்களிலும் பிர்ஜு செல்வதற்கு 2 ஆண்டு தடையை டிஜிசிஏ விதித்தது. இந்தியர் ஒருவருக்கு இதுபோன்ற தடையை டிஜிசிஏ விதிப்பது இதுவே முதல் முறையாகும்.
பயணிகளை பயமுறுத்துதல், சேதம் விளைவித்தல், விமானி அறைக்குள் நுழைதல், பாலியல் தொல்லை உட்பட முறைகேடாக நடப்பவர்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்படும். பிர்ஜு செய்தது அதிகபட்ச குற்றம் என்பதால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT