Published : 19 May 2018 08:55 PM
Last Updated : 19 May 2018 08:55 PM

வரும் 21-ம் தேதி கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு: சோனியா, ராகுல், பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு

கர்நாடக மாநிலத்தின்  புதிய முதல்வராக எச்.டி. குமாரசாமி வரும் திங்கள்கிழமை(21-ம்தேதி) பதவி ஏற்கிறார்.

பிரம்மாண்டமாக நடக்கும் இந்தப் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முன்பே பாஜக முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து ஆளுநர் வாஜுபாய் வாலா, பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எச்.டி.குமாரசாமி இது குறித்து பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:

''கர்நாடக மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். திங்கள்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பதவியேற்பு விழா நடைபெறும். காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கிறது.

பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோரும் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்பு விழாவுக்கு அனைத்துப் பிராந்திய முதல்வர்களையும் அழைத்து இருக்கிறோம். சோனியா காந்தி, ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளேன். மேலும், ஆந்திரா, மேற்கு வங்கம், தெலங்கானா முதல்வர்களையும் பதவி ஏற்புக்கு அழைத்துள்ளோம்.''

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x