Published : 19 May 2018 03:26 PM
Last Updated : 19 May 2018 03:26 PM

கர்நாடகத்தில் அரசியல் திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

உருக்கமாகப் பேசிய எடியூரப்பா அடுத்த முறை 150 இடங்களைப் பாஜக கைப்பற்றும் என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறி பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறி எடியூரப்பா முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். தேவைப்படும்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவர் ராஜினாமா செய்தார்.

முன்னதாக...

கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 உறுப்பினர்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இன்றுமாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கைவாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் எடியூரப்பா அரசுக்கு 104 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 7 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதையடுத்து இன்று காலை சட்டப்பேரவை வளாகத்திலேயே கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகருடன், முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான அளவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை. ஆதலால், வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பதவி விலகிக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டதாகக் கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறுகையில், எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை. நிச்சயம் அவர் நம்பிக்கைவாக்கெடுப்பில் தோல்வி அடைவார்.ஆனால், அதற்கு முன்பாகவே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் எனத் தெரிவித்தார்.

இன்னும் ஒரு மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நேரத்தில் எடியூரப்பா, ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். இதனால், பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது வேறு ஏதாவது ஆலோசனையில் ஈடுபடப்போகிறாரா என்றபரபரப்பான சூழல் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x