Last Updated : 19 May, 2018 12:46 PM

 

Published : 19 May 2018 12:46 PM
Last Updated : 19 May 2018 12:46 PM

‘நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எத்தனை குறுக்கு வழிகள், தடைகள்’ - பாஜகவைச் சாடிய சிதம்பரம்

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பாஜக எத்தனை விதமான சூழ்ச்சிகளையும், குறுக்குவழிகளையும், தனக்குச் சாதகமாக செய்துவருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தொடர்ந்த வழக்கில், இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கானபணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.சட்டப்பேரவை கூட்டப்பட்டு, தற்காலிக சபாநாயகர் அறிவிக்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பது குறித்து கடுமையாகச் சாடியுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

''உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்தப்படுகிறது. இது மாநிலத்துக்கு உட்பட்ட விஷயம் என்றபோதிலும், மாநில உயர் நீதிமன்றத்தை அனுகாமல், உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் நாடியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை இல்லாத பாஜகவை வெற்றி பெற வைக்க ஏராளமான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. முதலில் பெரும்பான்மையா நிரூபிக்க ஆளுநர் எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். 2-வதாக ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் ஒருவரை நியமித்தனர். மூன்றாவதாக, ரகசிய வாக்கெடுப்பு முறை தேவை என்றனர். 4-வதாக, தங்களுக்குச் சாதகமான, விசுவாசமான சபாநாயகரை தேர்வு செய்துள்ளனர். 5-வதாக என்ன செய்யலாம் என சிந்தித்து வருகிறார்கள்.

கர்நாடகத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற, பாஜக இன்னும் எத்தனை எத்தனை புதுப்புது சதிவேலைகளையும், குறுக்குவழிகளையும் கண்டுபிடிக்கப்போகிறதோ. நம்பிக்கை வாக்கெடுப்பை நடக்கவிடாமல் செய்ய எத்தனைத் தடைகளை அவர்கள் உருவாக்கப்போகிறார்களோ.

தேர்தலில் வெற்றி பெற்ற 221 எம்எல்ஏக்களும் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியாது, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது. பிறகு ஏன் நம்மை நான் ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.''

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த தேர்தலில் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 இடங்களும், பாஜவுக்கு 104 இடங்களும், பிற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்தன. இந்நிலையில், இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற 111 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பாஜகவிடம் 104 எம்எல்ஏக்கள் இருப்பதால், 7 எம்எல்ஏக்களை இழுக்க முயற்சித்து வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x