Published : 19 May 2018 07:27 AM
Last Updated : 19 May 2018 07:27 AM

ஓட்டலில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ மாயம்

ஹைதராபாத்தில் காங்கிரஸ் மஜத எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தாஜ் கிருஷ்ணா, நோவோடெல் ஓட்டல்களுக்கு சித்தராமையா, குலாம் நபி ஆசாத், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று மாலை வந்தனர். அவர்கள் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினர்.

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்களிக்கும் முறையை அவர்கள் விளக்கினர். மேலும், பெங்களூருவில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள எம்எல்ஏக்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் மஜத தலைவர் குமாரசாமியும் கலந்துகொண்டார்.

இதனிடையே நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். தான் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே காத்திருப்பதாகவும், உடனடியாக வெளியே வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் முகாமில் பீதி கிளம்பியது. தொலைபேசியில் பேசிய நபர் யார் என ஆய்வு செய்தனர். இதில் பெல்லாரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பேசியதாக தெரியவந்தது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செல்போன் அனைத்தும் அணைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மாயமானார். இதனால் காங்கிரஸ் முகாமில் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x