Published : 19 May 2018 07:25 AM
Last Updated : 19 May 2018 07:25 AM

பாஜகவின் குதிரை பேரத்துக்கு பயந்து ஹைதராபாத்தில் தங்கிய காங்., மஜத எம்எல்ஏக்கள்

கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டால், அதை தடுக்கும் முயற்சியாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவான போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறவில்லை. என்றாலும் அக்கட்சியின் கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். கர்நாடக முதல்வராக அக்கட்சியின் தலைவர் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

முறையே 78 மற்றும் 37 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காததால் அக்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் குதிரை பேரம் மூலம் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயன்றால் அதை தடுக்கும் முயற்சியில் இறங்கின.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் முதலில் கேரள மாநிலம் கொச்சின் செல்ல முடிவு செய்தனர். பிறகு ஹைதராபாத் செல்ல ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது. பின்னர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர், மாநில முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தலைமையில் அனைத்து எம்எல்ஏக்களும் 3 சொகுசு பஸ்களில் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று காலை 10 மணியளவில் ஹைதராபாத் வந்துசேர்ந்தனர். இவர்கள் அனைவரும் தாஜ் கிருஷ்ணா, நோவோட்டல், பார்க் ஹயாத் ஆகிய 3 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் வெளியில் எங்கும் செல்லாத வகையிலும் வெளியாட்கள் எவரும் இவர்களை சந்திக்காத வகையிலும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x