Last Updated : 18 May, 2018 06:01 PM

 

Published : 18 May 2018 06:01 PM
Last Updated : 18 May 2018 06:01 PM

கர்நாடக குழப்பம்; உச்ச நீதிமன்றத்தில் அனல்பறக்கும் வாதம்: ‘ஜோக்’ சொல்லி கூல் செய்த நீதிபதி

கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் குழப்பம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அனல் பறக்கும்வாதம் நடந்து கொண்டு இருக்கும் போது, நீதிபதி ஒரு ஜோக் சொல்லி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தாக்கல் செய்திருந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிக்ரி, நீதிபதி அர்ஜன் குமார் தலைமையிலான அமர்வுமுன் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி இருந்தார். காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார். மூன்று தரப்பினரும் காரசாரமாக வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நீதிபதி ஏ.கே.சிக்கிரி தனது மொபைல் வாட்ஸ்ப்பில் வந்த எம்எல்ஏக்கள் தொடர்பான நகைச்சுவையை பற்றிக் கூறினார்.

அப்போது, அவர் கூறுகையில், இந்த நேரத்தில்நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் எனது வாட்ஸ்புக்கு கர்நாடக அரசியல் தொடர்பாக ஜோக் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதாவது எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் சொகுசு ஹோட்டலின் உரிமையாளர் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறாராம். அதில் என்னிடம் 117 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், நான் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியுமா, என்னை எப்போது ஆட்சி அமைக்க அழைப்பீர்கள் என்று கேட்பது போன்ற நகைச்சுவை பரவி வருகிறது என்றார்.

இதைக் கேட்ட மற்ற வழக்கறிஞர்களும், நீதிபதிகள் எஸ்ஏபோப்தே, அசோக் பூஷன் ஆகியோரும் சில நிமிடங்கள் தங்களின் வாதத்தை மறந்து சிரித்தனர். இதனால், நீதிமன்ற அறையே சில நிமிடங்கள் சிரிப்பலையில் அதிர்ந்தது.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியும் அவர்களை அழைக்கவில்லை.

இந்தச் சூழலில் நேற்றுமுன்தினம் இரவு ஆளுநர் வாஜுபாய் வாலாவின் அழைப்பின் பெயரில், எடியூரப்பா நேற்று காலை 9 மணி அளவில் கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x