Last Updated : 18 May, 2018 03:00 PM

 

Published : 18 May 2018 03:00 PM
Last Updated : 18 May 2018 03:00 PM

நம்பிக்கை வாக்கெடுப்பு; உச்ச நீதிமன்ற உத்தரவு வரலாற்றுச் சிறப்புமிக்கது: காங்கிரஸ் வரவேற்பு

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடைக்கால உத்தரவாகும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கர்நாடகத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, 104 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட பாஜகவின் எடியூரப்பாவை முதல்வராக ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இது குறித்து இந்த வழக்கில் வாதாடிய காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷ்க் சிங்வி கூறுகையில்,

‘‘உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்காலத்தீர்ப்பாகும். இதற்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக 36 மணிநேரத்துக்குள் விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது இல்லை. எடியூரப்பா அளித்துள்ள கடிதத்தில் தனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பது குறித்து எந்தவிதமான விவரங்களும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர் அரசாங்கத்தை நடத்த எந்தவிதமான முகாந்திரமும் இல்லை’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறிய நிலையில், கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்கூட்டியே, விரைவாக நடத்தக்கோரி உத்தரவிட்டு இருப்பதன் மூலம் ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் பாதுகாத்துள்ளது. இதற்கு முன் வரலாற்றில் எந்த ஆளுநரும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் கொடுத்தது இல்லை’’ எனத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘எடியூரப்பாவை முதல்வராக அமரவைத்த ஆளுநரின் முடிவு என்பது, அரசியலமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது. 104 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவை பதவி ஏற்க ஆளுநர் அழைத்தது என்பது, அந்தக் கட்சியுடன் அவர் மிகவும் நெருக்கமானவர் என்பது தெரிகிறது’’ எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x