Published : 18 May 2018 01:41 PM
Last Updated : 18 May 2018 01:41 PM

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது வீடு இழந்து கண்ணீர் விட்ட மூதாட்டி:, தங்குமிடமும், பணமும் அளித்த உதவிய மும்பை போலீஸார்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றித்தின்போது, வீடு இழந்த மூதாட்டியின் நிலையைப் பார்த்து அவருக்குத் தங்குமிடமும், நிதி உதவியும் அளித்து மும்பை போலீஸார் உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் மும்பை போலீஸாரின் உதவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மும்பை புறகநரில் உள்ளது சாகிநகா. இங்குள்ள மொய்லி பகுதியில் சாச்சாட் எனும் மருத்துவமனையில் லதா சிவராஜ் சிங்(வயது65) என்ற மூதாட்டி துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையிலேயே உணவும், தங்குமிடமும் அந்த மூதாட்டிக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த அந்த மருத்துவமனை இடித்துத் தள்ளப்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி இருந்த, மூதாட்டி லதா சிவராஜ் சிங் வீடு இழந்து தெருவுக்கு வந்தார்.

இதையடுத்து, சாகிநகா போலீஸ் நிலையத்துக்கு சென்ற அந்த மூதாட்டி லதா சிவராஜ் சிங் தனது நிலையை போலீஸாரிடம் எடுத்துக்கூறினார்.

தன்னுடைய கணவர் 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் என்றும், தன்னுடைய ஒரேமகனும் விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்பதால், சிறிது காலம் மருமகள் வீட்டில் தங்கி இருந்தேன்.

அவரும் துரத்திவிட்டதால், மருத்துவமனையில் பணியாற்றி அங்குத்தங்கி இருந்தேன். இப்போது, மருத்துவமனை இடிக்கப்பட்டதால், எங்குச் செல்வது எனத்தெரியவில்லை எனக் கண்ணீர்விட்டு அழுதார்.

இதைக் கேட்டு நெகிழ்ந்த போலீஸார் அந்த மூதாட்டிக்கு உதவ முடிவு செய்தனர். போலீஸ் நிலையத்தின் ஒருபகுதியில் தற்காலிகமாக தங்கிக்கொள்ள அந்த மூதாட்டிக்கு அனுமதி அளித்து, உணவு, உடைகள் அளித்தனர்.

அதன்பின் ஏறக்குறைய 250 போலீஸார் சேர்ந்து ரூ.25 ஆயிரம் வசூலித்தனர். பின்னர் அந்த மூதாட்டி லதா சிவராஜ் சிங்கை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். அவரின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி, தாங்கள் அளித்த ரூ.25 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்து உதவினார்கள்.

சாகிநகா போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் நிலேஷ் பரேராவ்(வயது32) அந்த மூதாட்டி லதா சிவராஜ் சிங்கை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அவரிடம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ததற்கான வங்கிகணக்கு புத்தகத்தையும் ஒப்படைத்தார்.

மும்பை போலீஸாரின் இந்த உதவி சமூக உடகங்களில் பகிரப்பட்டு பெருமளவு பாராட்டப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x