Published : 18 May 2018 12:29 PM
Last Updated : 18 May 2018 12:29 PM

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் நடந்த குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

குட்கா முறைகேடு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு சிபிஐ விசாரணை தேவை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் அரசுத் தரப்பு, வருமான வரித்துறை தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, உணவு பாதுகாப்புத் துறை தரப்பு, திமுக தரப்பு என பல தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்தனர்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப் 26-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x