Published : 18 May 2018 10:57 AM
Last Updated : 18 May 2018 10:57 AM

ஹைதராபாத்திற்கு மாறிய கர்நாடக அரசியல்: 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம் - கட்சி மாறத் திட்டம்?

கர்நாடக அரசியல் தற்போது ஹைதராபாத்திற்கு மாறியுள்ளது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து கர்னூல் வழியாக 3 சொகுசு பஸ்களில் ஹைதராபாத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 3 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இல்லாத காரணத்தினால், இவர்கள் கட்சி மாறி பாஜகவில் இணைந்தார்களா ? என காங்கிரஸ், மஜத கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக பேரவை தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 38, இதரவை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்க வில்லை. பெரும்பான்மை கிடைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலையில், காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், அதிக பெரும்பான்மை கொண்ட பாஜகவை (104) ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்த காரணத்தினால், எடியூரப்பா 23-வது முதல்வராக வியாழக்கிழமை பதவி ஏற்றார். இவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சட்டப்பேரவை முன் உள்ள காந்தி சிலை முன் ஆளுநரின் போக்கை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்திற்கு மாறிய கர்நாடக அரசியல்

இந்நிலையில், தங்களது எம்எல்ஏ-க்களை கட்சி மாறாமல் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் வியாழக்கிழமை இரவு தனி விமானம் மூலம் முதலில் கேரள மாநிலம் கொச்சின் செல்ல முடிவு செய்தனர்.

அதன் பின்னர், ஹைதராபாத் செல்ல ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால், இவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என மத்திய விமானத்துறை கூறி விட்டதால், 3 சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் பின்னர் இவர்கள் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் தலைமையில் அனைத்து எம்எல்ஏ-க்களும் இன்று காலை 10 மணியளவில் ஹைதராபாத் வந்தடைந்தனர்.

இவர்களை ஹைதராபாத்தில் தங்க வைக்க கோல்கொண்டா நட்சத்திர ஓட்டல், பார்க் ஹையத் மற்றும் தாஜ் கிருஷ்ணா ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் தற்போது இவர்கள் அனைவரும் தாஜ் கிருஷ்ணா, நோவாட்டல், கோல்கொண்டா ஆகிய 3 ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளியில் எங்கும் செல்லாமலும், வெளியாட்கள் யாரும் இவர்களை சந்திக்காமல் இருக்கவும் வேண்டி, பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களிடமிருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

3 காங்கிரஸ்எம்.எல்.ஏ க்கள் எங்கே ?

பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் வந்துள்ள காங்கிரஸ், மஜத கட்சி எம்எல்ஏ-க்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களை காணவில்லை. இவர்களின் செல்போன்களும் செயலிழந்துள்ளன. ஆதலால், இவர்கள் பாஜகவில் இணையலாம் என கர்நாடக காங்கிரஸார் கருதுகின்றனர். ஆதலால், மீதமுள்ள எம்எல்ஏ-க்களை பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x