Last Updated : 17 May, 2018 06:57 PM

 

Published : 17 May 2018 06:57 PM
Last Updated : 17 May 2018 06:57 PM

எடியூரப்பாவின் விதி: ப.சிதம்பரம் கிண்டல்

 

கர்நாடகாவின் புதிய முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் தலைவிதி ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. அதேசமயம், 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலில் ஆளுநர் வாஜுபாய் வியாழக்கிழமை முதல்வராகப் பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அதிகாலை 2 மணியில் இருந்து 5 மணிவரை நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்திவைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம், எடியூரப்பா தனக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு குறித்து ஆளுநரிடம் அளித்த கடிதத்தின் நகலை 48 மணி நேரத்துக்குள் பாஜக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எடியூரப்பா பதவியில் நீடிப்பது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா இன்று மாநிலத்தின் 23--வது முதல்வராகப் பொறுப்பேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் வாஜுபாய் வாலா அளித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

''எடியூரப்பாவின் வழக்கை நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கு நான் சல்யூட் (வணக்கம்) தெரிவிக்கிறேன். நான் ஒருவேளை எடியூரப்பா பொறுப்பில் இருந்திருந்தால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை அதாவது 18-ம்தேதி, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவரை நான் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

எடியூரப்பாவின் தலைவிதி என்பது, ஆளுநரிடம் அவர் அளித்துள்ள கடிதத்தில்தான் இருக்கிறது. அந்தக் கடிதத்தில் 104 எம்எல்ஏக்களைத் தவிர வேறுஎந்த எம்எல்ஏக்களின் பெயரும் இடம் பெற்று இருக்க வாய்ப்பில்லை. ஆளுநரின் அழைப்பும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல்வராகப் பதவி ஏற்க எடியூரப்பாவை அழைக்கவில்லை.''

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x