Last Updated : 17 May, 2018 01:19 PM

 

Published : 17 May 2018 01:19 PM
Last Updated : 17 May 2018 01:19 PM

பெரும்பான்மையை நிரூபிப்பேன்; 5 ஆண்டுகள் ஆட்சி செய்வேன்: எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து, 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்வராகப் பொறுப்பேற்ற பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. அதேசமயம், 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இந்த கூட்டணியும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர்.

இந்த பரபரப்பான சூழலில் ஆளுநர் வாஜுபாய் வியாழக்கிழமை முதல்வராக பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்புவிடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதிகாலை 2 மணி முதல் காலை 5 மணி வரை 3 மணி நேரம் வரை விசாரணை நடந்தது.இந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்திவைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம், எடியூரப்பா ஆளுநரிடம் அளித்துள்ள எம்எல்ஏக்கள் கடிதத்தின் நகலை அளிக்கவும் பாஜக வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா இன்று கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் வாஜுபாய் வாலா அளித்துள்ளார்.

முதல்வராகப் பதவி ஏற்ற எடியூரப்பா அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கர்நாடக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நான் நிறைவு செய்வேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி என்பது, பாவக்கூட்டணி. அவர்கள் அதிகார வெறியுடன் அலைந்தார்கள். அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

அனைத்து எம்எல்ஏக்களும் மனசாட்சிப்படி, மக்கள் அளித்த தீர்ப்பின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள். எனக்கு மக்களின் ஆதரவும், கட்சியின் ஆதரவும் இருக்கிறது.''

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x