Published : 17 May 2018 10:15 AM
Last Updated : 17 May 2018 10:15 AM

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார்.

கர்நாடகத்தில் அருதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார்.

 இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  பதவி ஏற்பு விழாவில் பிற அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

பதவி ஏற்பு விழாவில் பாஜகவின் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு எடியூரப்பா மூன்றாவது முறையாக  கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

கர்நாடகத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், பாஜகவுக்கு 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37 இடங்களும், இதரகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.

தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதநிலையில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்தது.

காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, அவர்களை ஆட்சி அமைக்கக் கோரியது. இதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும் நேற்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள்.

அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனைத் தொடர்ந்து பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x