Published : 17 May 2018 08:57 AM
Last Updated : 17 May 2018 08:57 AM

எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை

எடியூரப்பா பதவியேற்பதற்கு எதிரான எந்த வித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் வழங்க மறுத்து விட்டது, மேலும் இது தொடர்பான மறுவிசாரணையை மே, 18, 2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.

எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கர்நாடகத்தில் அருதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார், இதனையடுத்து நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தை அணுகியது காங்கிரஸ் மற்றும் மஜத.

இதனையடுத்து இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் மனுவில் கோரியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன், மற்றும் எஸ்.ஏ.போப்தே தலைமையில் விசாரணையை நள்ளிரவு 1.45 மணிக்கு நடத்தியது.

இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணி நேரம் நீடிக்க விடிய விடிய விசாரணை நடந்தது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிக்காக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கர்நாடகா ஆளுநர் எடுத்த முடிவை எதிர்க்கிறோம் என்றும் ஆளுநரை எதிர்க்கவில்லை, அவரது முடிவைத்தான் எதிர்க்கிறோம் என்று வாதிட்டார்.

முகுல் ரோஹத்கி தன் வாதத்தை முன் வைக்கும்போது ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, அதிகத் தொகுதிகளில் வென்ற தனிப்பெரும் கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா பதவியேற்பது தொடர்பான எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என்றும் எடியூரப்பா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x