Published : 17 May 2018 07:54 AM
Last Updated : 17 May 2018 07:54 AM

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு ஜூலை 17-ல் விசாரணை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கன்கனி கிராமத்துக்கு 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்காக வந்திருந்த சல்மான் கான், அங்கு அரிய இன மான்களைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும், உரிமம் காலாவதியான துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் அவரை நீதிமன்றம் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட சல்மானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே, உரிமம் காலாவதியான துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கிலிருந்து சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, ஜோத்பூர் மாவட்ட நீதிபதி சந்தர் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சல்மான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மான் வேட்டை வழக்கையும், துப்பாக்கி உரிமம் காலாவதியான வழக்கையும் ஒருசேர விசாரிக்க கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இந்த வழக்கை ஜூலை 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x