Last Updated : 17 May, 2018 07:53 AM

 

Published : 17 May 2018 07:53 AM
Last Updated : 17 May 2018 07:53 AM

கோவையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை வழக்கு: பஞ்சாபில் மேலும் 2 பேரை கைது செய்தது தமிழக போலீஸ்

கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பஞ்சாபில் பதுங்கியிருந்த மேலும் இருவரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை வைசியர் தெருவில் ஸ்வர்ண கலஷ் ஜுவல்லரி உள்ளது. இதன் 2 ஊழியர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 11–ல் தங்க நகைகளை விற்க பெங்களூரு சென்றனர். விற்றது போக மீதமிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ நகைகளுடன் அன்று இரவு கர்நாடகா அரசு பேருந்தில் கோவை திரும்பினர். அப்போது நகை பெட்டியை தங்கள் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தனர். கோவை வந்தடைந்த பிறகு நகைகள் அடங்கிய பெட்டி கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை சி-3 காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் சுசேலன்கலன் கிராமத்தைச் சேர்ந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கு முகாமிட்டிருந்த காவல் துறையினர், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கொள்ளை கும்பல் தலைவன் அஸ்லாம் அக்தரை (30) கைது செய்தனர்.

இது தொடர்பான செய்தி கடந்த பிப்ரவரி 25-ல் ‘தி இந்து’வில் மட்டுமே விரிவாக வெளியானது. அஸ்லாமை காவலில் எடுத்து விசாரித்ததில், ரிஜ்வான் அக்தர் (21), இம்ரான் அக்தர் (25) ஆகிய தனது இரு சகோதரர்களுடன் இணைந்து நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கோவை துணை ஆணையர் சோமசேகரன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட படை உ.பி. விரைந்தது. விசாரணையில், அஸ்லாமின் இரு சகோதரர்களும் பஞ்சாபின் லூதியானாவில் குடும்பத்துடன் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து, லூதியானாவுக்கு சென்ற செந்தில்குமார் தலைமையிலான காவல் படையினர், ரிஜ்வான், இம்ரான் ஆகிய இருவரையும் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்ட எஸ்பி செழியன் என்ற தமிழர் இந்த கைது நடவடிக்கைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அஸ்லாமை கைது செய்ய உதவியாக இருந்த புலந்த்ஷெஹர் எஸ்.எஸ்.பி. ஜி.முனிராஜ் என்ற தமிழர் மூலம் இந்த உதவி கிடைத்துள்ளது.

4 பேர் தலைமறைவு

இந்நிலையில், இருவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை, உபியின் அம்ரோஹாவில் 6 நகைக் கடைகளை நடத்திவரும் கவுரவ், அமித் மற்றும் ஹேமந்த் ஆகிய 3 சகோதரர்களிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழக காவல் படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் மூவரும் தலைமறைவாகி விட்டனர்.

இவர்கள் கொள்ளை கும்பல்கள் திருடும் நகைகளை விலைக்கு வாங்கி வந்துள்ளனர். இந்த கொள்ளையில் அஸ்லாம் கும்பலுக்கு ஹசன் என்பவரும் உதவியுள்ளார்.

இந்த 4 பேரையும் அம்ரோஹாவில் தலைமறைவு குற்றவாளிகள் என தமிழக காவல் படையினர் அறிவித்துவிட்டு, நேற்று கோவை திரும்பினர். ரிஜ்வான், இம்ரான் ஆகிய இருவரும் நேற்று மாலை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக உபி மற்றும் ராஜஸ்தான் கொள்ளையர்கள் தமிழகத்தில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதில், சென்னை கொளத்தூரில் 2017-ல் நடந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நாதுராமை பிடிக்க தமிழக காவல் படை ராஜஸ்தான் சென்றது. அப்போது ஜெய்தாரனில் நாதுராமை பிடிக்க முயன்றபோது, கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டுபட்டு பலியானார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x