Last Updated : 17 May, 2018 06:54 AM

 

Published : 17 May 2018 06:54 AM
Last Updated : 17 May 2018 06:54 AM

ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு: பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இத னால் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவுக்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட் டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில் மஜத சட்டப்பேரவை தலைவராக மஜத மாநில தலைவர் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இரு சுயேச்சை உறுப்பினர்களும் மஜதவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து குமாரசாமி ஆளுநரை சந்தித்து காங்கிரஸ், மஜத கூட்டணி சார்பாக தன்னை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு கடிதம் அளித்தார். இதே போல பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை பாஜக தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதற் கான கடிதத்தை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அனந்த்குமார் ஆகியோருடன் சென்று ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் எடியூரப்பா வழங்கி னார். தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்திருப்பதால் எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.

இதனிடையே மஜத 118 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட தங்களையே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். இரு தரப்பு கோரிக்கைகளையும் பெற்றுக்கொண்ட ஆளுநர் வஜு பாய் வாலா அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சொகுசு விடுதியில் தங்கவைப்பு

இந்நிலையில் காங்கிரஸ், மஜத உறுப்பினர்களை பாஜக ரூ. 100 கோடி மற்றும் அமைச்சர் பதவி ஆசைக்காட்டி இழுக்க பார்க்கிறது என குமாரசாமி குற்றம்சாட்டினார். ஆளுநர் நேற்று மாலை வரை அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பெங்களூருவில் உள்ள‌ ஆளுநர் மாளிகைக்கு பேரணி யாகச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீ ஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தாவுவதை தடுக்க அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூடி நேற்று ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று கட்சி அலுவலகத்தில் இருந்து மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல் லப்பட்டனர். இதேபோல பெங்களூரு வசந்த் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மஜத எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

ஆளுநர் அழைப்பு

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா வியாழக் கிழமை ஆளுநர் மாளிகையில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் கசிந்தது. இதையடுத்து குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் ஆகியோர் ஆளுநரை சந்தித்து 118 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை வழங் கின‌ர்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ முருகேஷ் நிரானி கூறும்போது, “ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். வியாழக்கிழமை எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். முதல் கட்டமாக அவருடன் ஒரு சிலர் மட்டும் அமைச்சர்க ளாக பதவியேற்பார்கள். பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகு, அடுத்தடுத்த நாட்களில் முழு அமைச்சரவையும் பதவியேற்கும்” என்றார்.

பதவியேற்ற 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் ரத்ன பிரபா, விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார்.

இதனிடையே கர்நாடக பாஜக வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா வியாழக் கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை அடைவதற்கான இலக்கை நெருங்கியுள் ளோம்” என கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் அழைப்பால் கர்நாடகாவில் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் ட்விட்டர் பக்கத்திலிருந்து இந்த பதிவு நீக்கப்பட்டது.

மஜத, காங்கிரஸ் போர்க்கொடி

ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து மஜத, காங்கிரஸ் கட்சிகள் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளன. நள்ளிரவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அணுகி அவசர வழக்காக விசாரிக்கும்படி முறை யிட முடிவெடுத்துள்ளனர்.

இதே போல வியாழக்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவும் இரு கட்சியினரும் முடிவெடுத்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x