Published : 16 May 2018 08:59 PM
Last Updated : 16 May 2018 08:59 PM

கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு?: போலீஸாருக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்

கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவிஏற்க இருக்கிறார் என்று கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக உருவானது. ஆனால், பாஜகவை ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படாத வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. இதனால், இரு கட்சிகளும் 117 எம்எல்ஏக்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

இந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையே பாஜகவின் சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவும் ஆளுநர் வாஜுபாய்வாலாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரி கடிதம் அளித்தார். ஆளுநர் உரிய முடிவை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார்.

அதேசமயம், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு ஆளுநரைச் சந்திக்க இன்று மாலை குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத் ஆகியோர் சென்றனர். ஆனால், ஆளுநர் கூட்டாக சந்திக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அனைத்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்து குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் பேசி ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அரசியலமைப்புச் சட்டப்படி நடவடிக்கைகள் எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தாக குமாரசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதனால், ஆளுநர் வாஜுபாய் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில், ராஜாஜிநகர் பாஜக எம்எல்ஏவும், செய்தித்தொடர்பாளருமான சுரேஷ் குமார் ட்விட்டரில் கன்னடத்தில் செய்துள்ள ட்வீட்டில், பி.எஸ்.எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாநில உளவுத்துறை போலீஸாருக்கு அனுப்பியுள்ள கடித்ததில் நாளை முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்க இருக்கிறார். இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பிரச்சினை செய்யக்கூடும். ஆதலால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும், விடுப்பில் இருக்கும் போலீஸாரை உடனே பணிக்கு அழைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், கர்நாடகத்தில் அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது.

ஆனால்,பின்னர் இந்த ட்வீட் பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் பதிவில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து இது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x