Last Updated : 16 May, 2018 04:14 PM

 

Published : 16 May 2018 04:14 PM
Last Updated : 16 May 2018 04:14 PM

காவிரி நதிநீர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளும் 10 அம்சங்களும் ஒருபார்வை

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், வரைவு செயல் திட்டத்தில் செய்யப் பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த உத்தரவுகளையும் மத்திய அரசுக்கு பிறபித்துள்ளது. அது குறித்த சுருக்கம்.

1. காவிரி நதிநீர் வழக்கை ஜூலை மாதம் முதல்வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

2. காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பின் உத்தரவுகளுக்கு சம்பந்தப்பட்ட 4 மாநில அரசுகள் கட்டுப்படாவிட்டால், மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்ற அம்சத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த அம்சத்தை திருத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

3. காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்புக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீர்திறப்பில் எந்தவிதமான பிரச்சினை ஏற்பட்டாலும் ஆணையத்தைத்தான் மாநிலங்கள் அணுக வேண்டும். மத்திய அரசை அணுகத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

4. அணைகளில் இருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை மேலாண்மை வாரியமே மேற்கொள்ள வேண்டும்.

5. தமிழக்தின் கோரிக்கையான காவிரி மேலாண்மை அமைப்பு என்பதை காவிரி மேலாண்மை வாரியம் என்று மாற்றி அழைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

6. காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் எந்தவிதமான அணைகளையும், தடுப்பணைகளும் தமிழக அரசும், கர்நாடக அரசும் கட்டக்கூடாது.

7. இறுதித்தீர்ப்பின்படி காவிரி நிதிதிறப்பை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றது காவிரி மேலாண்மை வாரியம். வாரியத்துக்குத்தான் முழு அதிகாரங்களும் உண்டு.

8. காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்பு. அதேசமயம், நிர்வாக ரீதியான அலுவலகம் பெங்களூருவில் செயல்படவும் அனுமதி.

9. காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

10. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அளித்த திருத்தங்களை நாளைக்குள் செயல்படுத்தி, தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரிவிட்டது. வழக்கின் விசாரணை நாளை(17-ம்தேதி) மீண்டும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x