Last Updated : 16 May, 2018 01:02 PM

 

Published : 16 May 2018 01:02 PM
Last Updated : 16 May 2018 01:02 PM

‘கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமையும்’-எடியூரப்பா திட்டவட்டம்

கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாஜக ஆட்சி அமையும் என்று திட்டவட்டமாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், பாஜகவுக்கு 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37 இடங்களும், இதரகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.

தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதநிலையில், பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள்.

இந்நிலையில், பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் அந்த கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திதல் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்து தன்னை ஆட்சி அமைக்கஅழைக்க வேண்டும் எனக் கோரி கடிதம் அளித்தார்.

அதன்பின் அங்கிருந்து வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால், என்னை முதல்வர் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும், என்று கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்தோம். அதற்கு ஆளுநர் உரிய முடிவை விரைவாக எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. ஆளுநர் விரைவாக முடிவு எடுப்பார் என நம்புகிறோம்.’’

 இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

இதற்கிடையே சுயேட்சை எம்எல்ஏ சங்கர் பாஜகவுக்கான ஆதரவு கடிதத்தை எடியூரப்பாவிடம் அளித்தார்.

காங், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் கோபம்

KSEshwarappaMay16jpgபாஜக தலைவர் ஈஸ்வரப்பா100 

இதற்கிடையே பாஜக தலைவர்கள் சுரேஷ் குமார், ஈஸ்வரப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ’’காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியில் உள்ள அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியின் தலைமை மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். அவர்கள் பாஜகவின் பக்கம் வரவிருப்பமாக இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் ஏற்போம்’’ எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் பகவந்த் குபா நிருபர்களிடம் கூறுகையில், ’’பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் பாஜக அதன் பெரும்பான்மையை நீருபிக்கும். கவலைப்படத் தேவையில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வெளிப்படையாகவே நான் பேசுகிறேன், பாஜக பெரும்பான்மையை நிருபிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஜகதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x