Published : 16 May 2018 08:28 AM
Last Updated : 16 May 2018 08:28 AM

தென்னிந்தியாவை நோக்கிய பாஜகவின் பயணம் தொடங்கிவிட்டது: கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து ராம் மாதவ் கருத்து

தென்னிந்தியாவை நோக்கிய பாஜகவின் பயணம் தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 தொகுதிகளைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பாஜக தேசியப் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக பலர் வியூகம் வகுத்து செயல்பட்டனர். குறிப்பாக, அம்மாநிலத்தில் பெருவாரியாக வசிக்கும் தெலுங்கு மக்களை பாஜகவுக்கு எதிராக திசைதிருப்ப ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். ஆனால், கர்நாடகாவின் தெலுங்கு மக்கள் அவரது வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டனர். கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கர்நாடக தேர்தல் வெற்றி மூலம் தென்னிந்தியாவை நோக்கிய பாஜகவின் பயணம் தொடங்கியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே, “கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவாகியிருப்பதன் மூலம் ஒரு புதிய வெற்றி வரலாறு படைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு வாக்களித்த கர்நாடகா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவானது, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளது” என்றார்.

“கர்நாடக தேர்தல் வெற்றியானது பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு, கர்நாடகா தேர்தல் முடிவானது ஒரு களம் அமைத்து தந்துள்ளது” என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x