Published : 16 May 2018 07:20 AM
Last Updated : 16 May 2018 07:20 AM
சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பின் (சிமி) தலைவர் சப்தார் நஹோரி உட்பட 18 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வாஹேமான் பகுதியில், தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கேரள போலீஸார் கடந்த 2007-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். எனினும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, இந்த வழக்கு 2010-ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கேரளா மட்டுமின்றி கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சிமி அமைப்பினர் ரகசியமாக ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிமி அமைப்பின் தலைவர் சப்தார் நஹோரி உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதாகியுள்ள 35 பேரில் 18 பேரை குற்றவாளிகள் என கொச்சி என்ஐஏ நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதில், சிமி அமைப்பின் தலைவர் சப்தார் நஹோரியும் (48) ஒருவர். அதேசமயத்தில், குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சூழலில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 18 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT