Published : 15 May 2018 06:30 PM
Last Updated : 15 May 2018 06:30 PM
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக கட்சியின் வேட்பாளர்கள் ‘நோட்டா’ பெற்ற வாக்குகள்கூட பெறாமல் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 12-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் அஇஅதிமுக கட்சியின் சார்பில் காந்திநகர், ஹனுர், கோலார்தங்கவயல் ஆகிய 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த 3 வேட்பாளர்களும் சென்னையில் ஆர்கேநகர் தொகுதியில் பாஜக பெற்ற தோல்வியைப் போல் மிக மோசமான தோல்வியைச்சந்தித்துள்ளனர்.
இதற்கு முன் கர்நாடக மாநிலத்தில் அதிமுக கட்சியின் மாநிலச் செயலாளராக புகழேந்தி இருந்துவந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைக்குச் சென்றது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் சேர்ந்தது ஆகியவற்றால் டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக யுவராஜ் மாநிலச் செயலாளராக அதிமுக கட்சி சார்பில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில அதிமுக செய்லாளர் யுவராஜ் 545 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 2,074 வாக்குகள் கிடைத்தன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமார் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவர் 503 வாக்குகள் மட்டுமே படுதோல்வி அடைந்தார். ஆனால் இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,373 வாக்குகள் கிடைத்தன.
அதேபோல தமிழர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட எம்.அன்பு 1,024 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,750 வாக்குகள் கிடைத்தன.
ஒட்டுமொத்தமாக 3 தொகுதிகளிலும் சேர்த்து அதிமுகவுக்கு 2,072 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், நோட்டாவுக்கு 5,197 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT