Published : 13 May 2018 09:42 AM
Last Updated : 13 May 2018 09:42 AM

இரு தரப்பினர் மோதல் மகாராஷ்ட்ராவில் 2 பேர் பலி: 50 பேர் படுகாயம்

மகாராஷ்ட்ராவில் இருவேறு தரப்பு மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10 போலீஸார் உட்பட 50 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் மோதிகரஞ்சா பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு மட்டும் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தக் குடிநீர் இணைப்பை அங்கு வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பைச் சேர்ந்த மக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறிது நேரத்திலேயே இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகளுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், மோதிகரஞ்சா பகுதிக்கு அருகில் உள்ள ஷாகஞ்ச், நவாப்புரா ஆகிய இடங்களிலும் மேற்குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே மோதல் மூண்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த சென்ற போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தக் கலவரச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 10 போலீஸார் உட்பட 50 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மாநில ரிசர்வ் போலீஸார் நேற்று காலை அங்கு சென்று தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். மேலும், அசம்பாவிதச் சம்பவங்களை தடுப்பதற்காக அவுரங்காபாத் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x