Published : 24 Apr 2018 07:57 PM
Last Updated : 24 Apr 2018 07:57 PM

எங்கிருந்து வந்தன மனிதர்களைக் கடிக்கும் பயங்கர ஈக்கள் படை?: கடும் பீதியில் அசாம் கிராம மக்கள்; குழப்பத்தில் நிர்வாகம்

 

அசாம் மாநில சிவசாகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் 15 நாட்களுக்கு முன்பாக எங்கிருந்து வந்தன என்று தெரியாத பயங்கர ஈக்கள் படை புகுந்தது, இது சாதாரணமாக வீடுகளில் காணப்படும் மொய்க்கும் ஈக்கள் அல்ல, மனிதர்களையும் கால்நடைகளையும் கடித்துத் துன்புறுத்தும் ஈக்களாக இருந்ததால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

15 நாட்களாக கிராம மக்களைக் கடித்து துன்புறுத்தி வரும் இந்த ஈக்கள் பற்றி ஆராய பூச்சி ஆய்வு நிபுணர்களை வரவழைக்க கிழக்கு அசாம் சிவசாகர் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஈக்கள் நிச்சயம் அப்பகுதிக்கானவை அல்ல என்று மக்கள் கூறுகின்றனர்.

“திகோமுக் கிராமங்களில் வித்தியாசமான தோற்றத்தில் உள்ள இந்த ஈக்கள் புகுந்துள்ளன. இந்த ஈக்கள் மனிதர்கள், கால்நடைகளை கடிப்பதில் சருமத்தில் எரிச்சலும் பலருக்கு வீக்கமும் ஏற்பட்டுள்ளது, ஆனால் கிருமித்தொற்று இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை” என்று சிவசாகர் மாவட்ட உதவி ஆணையர் நவாப் அலாசர் அலி தெரிவித்துள்ளார்.

இந்த ஈக்கள் குறித்து ஆய்வுகளுக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவர்களும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வந்துள்ளனர்.

மற்ற இடங்களுக்கும் இந்த ஈக்கள் பரவாமல் தடுக்க கொசு மருந்தையே பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் தி இந்து (ஆங்கிலம்) இதழுக்கு தெரிவித்துள்ளது.

தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் நோய்களை உருவாக்கும் ஆப்பிரிக்க கறுப்பு ஈக்கள் வகையா என்று வேளாண்மைத்துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், பிற சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவற்றினால் உடற்கூறியல் ரீதியாகவும் மரபணு ரீதியாக மாற்றங்கள் அடைந்த ஈக்களாக இவை இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க வகை கறுப்பு ஈக்கள் என்றால் கடித்த ஓரிரு வாரங்களில் முதலில் காய்ச்சல், தலைவலி, எரிச்சல், மூட்டு வலிகள் தோன்றும் பிறகு படிப்படியாக தூக்கத் தொந்தரவுகள் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x