Published : 20 Apr 2018 08:17 AM
Last Updated : 20 Apr 2018 08:17 AM
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூருவில் குடியேறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார். இதையொட்டி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பெங்களூருவில் குடியேற திட்டமிட்டார். இதற்காக கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆர். அசோக், பெங்களூருவின் மையப் பகுதியில் வீடு தேடும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பெங்களூருவின் சாளுக்கிய சதுக்கம் அருகேயுள்ள ஃபீல்ட் லே-அவுட்டில் வாடகைக்கு ஒரு பங்களா தேர்வு செய்யப்பட்டது. 6 படுக்கை அறைகள் உட்பட 12 அறைகள் கொண்ட 2 அடுக்கு பங்களாவில் அமித் ஷா நேற்று குடியேறினார்.தேர்தல் முடியும் வரை அவர் இங்கு தங்க திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக உடுப்பி பூஜாரிகள் மூலம் சிறப்பு யாகமும், பூஜையும் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வீட்டுக்கு வந்த அமித் ஷா, பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் ஆர். அசோக், ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
ஃபீல்ட் லே-அவுட் பகுதியில் அமித் ஷா குடியேறியுள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஜக தொண்டர் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT