Published : 18 Apr 2018 11:01 AM
Last Updated : 18 Apr 2018 11:01 AM
மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடனமாடியதற்காக இரு பெண் ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் தேவாஸ் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 13 அன்று இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட திட்ட அலுவலர் சுனிதா யாதவ் மற்றும் தெற்கு திட்ட அலுவலர் பிரியங்கா ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது, அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலுவலக ஊழியர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து பெண்களுடன் ''கஜ்ரா ரே'' என்ற பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதையடுத்து திவாகர் ரோஜாஸ்கர் மற்றும் சினேகா ஷர்மா ஆகிய இரு பெண் ஊழியர்களை இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ரோஜாஸ்கர் உதவியாளராகவும், சினேகா மேற்பார்வையாளராகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்டத்துறையில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் நடனமாடிய தனியார் ஊழியர்கள் இருவரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு காரணமான மாவட்ட திட்ட அலுவலர் சுனிதா யாதவ் மற்றும் தெற்கு திட்ட அலுவலர் பிரியங்கா ஜாய்ஸ்வால் ஆகிய இரு அதிகாரிகளும் கேக் வெட்டும் நிகழ்ச்சி முடிந்த உடனே தங்கள் அறைக்கு திரும்பிவிட்டதாக தெரிகிறது. அவர்கள் தங்கள் பணி இடத்திற்கு திரும்பிச் சென்றபிறகே அவர்களின் பிறந்த நாள் நடன நிகழ்ச்சியை ஊழியர்கள் அரங்கேற்றியதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT