Published : 17 Apr 2018 02:27 PM
Last Updated : 17 Apr 2018 02:27 PM
உன்னாவ், காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் அளித்த அதிர்வலைகள் மாறுவதற்குள், உ.பியில் நேற்று 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து ஈட்டா போலீஸ் எஸ்.பி.அகிலேஷ் சவுரேஸ்யா கூறியதாவது:
ஈட்டா நகரின் புறநகரான மண்டி சமிதியில் நேற்று ஒரு திருமணத்துக்காக 7 வயது சிறுமி அவரின் பெற்றோரும் வந்தனர். நள்ளிரவு1.30 மணி அளவில் திருமணத்துக்காக பந்தல் அமைக்கும் பணியில் இருந்த ஒருவர் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த 7-வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கயிற்றால் கழுத்தை இறுக்கி சிறுமியை கொலை செய்து, அருகே இருக்கும் கட்டிடத்துக்குள் போட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் சிறுமி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அந்தச் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று டாக்டர் தெரிவித்தார்.
இதையடுத்து ஆத்திமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள், ஈட்டா, ஃபருக்காபாத் சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் போலீஸார் சென்று அவர்களிடம் சமாதானம் செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.
சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரைப் பெற்றுக்கொண்டு, அந்தச் சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். சிறுமியைக் கொலை செய்த பந்தல் அமைக்கும் ஊழியர் சோனு ஜாதவை கைது செய்துவிட்டோம். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் எஸ்பி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT