Last Updated : 17 Apr, 2018 08:49 AM

 

Published : 17 Apr 2018 08:49 AM
Last Updated : 17 Apr 2018 08:49 AM

காலியான மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா?

அடுத்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போது காலியாக உள்ள 5 மக்களவை தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் ஓரிரு தொகுதிகள் சில காரணங்களால் காலியாவதும், பிறகு அதற்கான இடைத்தேர்தல் நடைபெறுவதும் வழக்கமான ஒன்று. அதேநேரம் தேர்தல் விதிமுறைப்படி ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இப்போது 5 மக்களவை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில், மகராஷ்டிர மாநிலம் கோண்டியா ஜூன் 8, பால்கர் ஜூலை 31 மற்றும் உத்தரபிரதேசத்தின் கைரானாவில் ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும்.

காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் வன்முறை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு 2 ஆண்டுகளாக அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இது மாநில முதல்வர் மெகபூபா முப்தியால் ராஜினாமா செய்யப்பட்ட தொகுதி ஆகும். சமீபத்தில் நாகாலாந்து முதல்வராக பதவி ஏற்ற நெபியு ரியோ ராஜினாமா செய்த மக்களவை தொகுதியும் காலியாக உள்ளது.

எனினும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தலுடன் எந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், காலியாக உள்ள இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினாலும், வெற்றி பெறுபவர் ஒரு ஆண்டு கூட பதவி வகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த 5 தொகுதிகளும் பொதுத்தேர்தல் வரை காலியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி யின் மக்களவை எம்பிக்கள் 5 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டால் காலியாக உள்ள மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும்.

கடைசியாக கடந்த மார்ச் 11-ல் உபியின் கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த ஆதித்யநாத் உ.பி. முதல்வரானார். துணை முதல்வராக பொறுப்பேற்ற கேசவ் பிரசாத் மவுரியாவும் பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இருவருமே 6 மாதம் முடியும் தருவாயில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். எனினும், இவ்விரு தொகுதிகளும் காலியாகி 6 மாதங்கள் முடியும் நிலையில் தான் இடைத்தேர்தல் நடை பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x